Wednesday, May 23, 2012

கோவில்பட்டி சங்கமம்

பால்யம் என்றும் இனிமையானது தான்.மனம் எப்போதுமே பால்ய நினைவுகளில் நீந்தும் போது துள்ளிகுளிக்கதான் செய்கிறது.இயந்திரதனமான வாழ்க்கையில் மனம் சோர்வுறும்போது பழைய நண்பர்களை தேடுகிறது. வங்கி வூழியர் சங்க மாநாட்டில் பழைய நண்பர்களை பார்க்கும் போது அளவு கடந்த மகிழ்ச்சி மனசில் கொப்பளிக்கிறது.இப்படிதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மாநாட்டில் எங்களோடு பணிபுரிந்த ஜெயந்தி மற்றும் ஆன்சிலா ஆகியோரை சந்திக்கும்போது கோவில்பட்டியில் பணிபுரிந்த பழைய நண்பர்கள் எல்லோரும் சந்திக்க ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணுங்களேன் நாதன் என்று சொன்னபோது மனசுக்குள் ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஏற்பட்டது.ஆஹா ..இப்படி ஒரு ஏற்பாட்டை ஏன் நாம் பண்ணகூடாது என்று நண்பர் ஆறுமுகத்திடமும் ஆண்டியப்பனிடமும் கேட்டேன். அவர்களும் சந்தோசமாக பண்ணலாமே என்று சொன்னதும் மனம் அசைபோட துவங்கியது. கோவில்பட்டி சங்கமம் விதையாக மனசில் வூன்றியது அன்றுதான்.

உடனடியாக எங்கள் வழிகாட்டியும் இனிய தோழருமான பால்வண்ணம் அவர்களிடம் இது குறித்து பேசினோம்.அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தார்.பழய கோவில்பட்டி நண்பர்கள் அனந்தசங்கர், எஸ்.பெருமாள், லோகநாதன்,சரவணகுமார்,ஜோ பெர்னாண்டோ ,சுவாமிநாதன் உள்ளிட்ட முக்கிய நண்பர்கள் கூடி பழய நண்பர்களின் முகவரி மற்றும் மொபைல் எண்களை சேகரிக்க ஆரம்பித்தோம். சில நண்பர்களை தொடர்பு கொண்டு பேசி ஏப்ரல் இருபத்து ஒன்பது நாம் கோவில்பட்டி நகரில் சந்திக்க இருக்கிறோம் என்று சொன்னபோது அவர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்கள்.சென்னையில் இருந்தும் திருவனந்தபுரத்தில் இருந்தும் ரயிலுக்கு ரிசெர்வ் செய்து விட்டதாக ஜெயந்தி , ஆன்சிலா மற்றும் லதா தெரிவித்தார்கள். கோவில்பட்டியில் எங்கள் முன்னோடி தளபதி கோபாலகிருஷ்ணன் , வெற்றிலை ரசனை கொண்ட எங்கள் அன்பு நைனா முத்துவரதராஜன் ஆகியோர் தங்கள் வருகையை உறுதிபடுத்தி கொண்டார்கள்.
நண்பர்கள் லிஸ்ட் பெருகிக்கொண்டே போனது. கட் ஆப் வருஷம் எழுபத்தெட்டு என்பது போய் வர விருப்பம் உள்ளவர்கள் எல்லோரும் வரட்டும் என்று தொடர்பு கொள்ள ஆரம்பித்தோம்.
பழைய புகை படங்களை சேகரிக்க ஆரம்பித்தோம்.திருவனந்தபுரத்தில் இருந்து நண்பர் பாலசுப்ரமணியன் தனது புகைப்பட பொக்கிசங்களை தபாலில் அனுப்பிவைத்தார்.சென்னையில் இருந்து சுவாமிநாதன், முரளி, கோவில்பட்டியில் இருந்து ரெங்கநாயகி, திருவனந்தபுரத்தில் இருந்து லதா என போட்டோக்கள் குவிந்தன.பழய புகைப்படங்களை பார்க்கும்போதே என் மனம் பழைய உலகிற்கு சென்று விட்டது. அட எனக்கு கூட தலையில் இவ்வளவு முடி இருக்கிறதா என்று சிரித்து கொண்டேன்.(எந்த படம் என்று கேக்காதீர்கள்..)

சாப்பாடு ஏற்பாடுகளை ஆண்டியப்பனும் வள்ளியும் கவனித்துகொண்டர்கள்.எங்கள் அன்பு தோழர் மில்க் ராமசுப்பு இருக்கும்போது எங்களுக்கு என்ன கவலை..ராஜ்மஹால் மண்டப உரிமையாளர் ராஜேந்திரனை சந்திக்க ஏற்பாடு செய்தார். வழக்கமான வாடகையில் நான்கில் ஒரு பங்கு மட்டும் கொடுங்கள் போதும் என்று அவர் சொல்லி விட்டார். பழய , மிக பழய நண்பர்களும் கூட வருவதற்கு ஆர்வம் காட்டியது தான் எங்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
முதல் நாள் இரவு நண்பர் ஆறுமுகம், ஜெயசிங் , மற்றும் கோவில்பட்டி தோழர்கள் உதயசங்கர், சாரதி, ரெங்கராஜன் ஆகியோர் கண்காட்சி ஏற்பாடுகளை விடிய விடிய செய்தோம்.இரவு வள்ளிநாயகம் வீட்டில் அருமையான விருந்து சாப்பாடு...

இருபத்து ஒன்பது காலை ...
நண்பர்கள் ஒவ்வொருவராய் அவரவர் குடும்பத்தோடு வர ஆரம்பித்தார்கள்.எங்கும் ஒரே உற்சாகம்..பழைய நண்பர்களை பார்த்த உடனே தழுவி கொண்டார்கள்.வேறு எந்த கிளையிலும் இது சாத்தியமா என்று தெரியவில்லை..(இன்னும் வரும் ...)

Saturday, April 14, 2012

பொக்கிஷம்

பொக்கிஷம்

சிறிது நாட்களுக்குமுன் கோவில்பட்டி திருவள்ளுவர் மன்ற நிர்வாகிகளுள் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு திருவள்ளுவர் மன்ற கூட்டத்துக்கு பேச வர இயலுமா என்று கேட்டார். நான் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடி போனேன். கேட்டவருக்கு நான் கோவில்பட்டியை சேர்ந்தவன் என்ற விபரம் மட்டுமே தெரிந்திருக்ககூடும்.எனக்கும் திருவள்ளுவர் மன்றத்துக்கும் உள்ள தொடர்பு அவர் தெரிந்திருக்க நியாயமில்லை.

கழுகுமலையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த புதிதில் என் வீட்டுக்கு அருகில் இருந்த ஆயிர வைஸ்ய துவக்கப்பள்ளியில் நடைபெற்ற திருவள்ளுவர் மன்ற இலக்கிய கூட்டங்களுக்கு என் அப்பா அழைத்து செல்வது வழக்கம்.(இந்த பள்ளியில் தான் கரிசல் எழுத்தாளர் கு.அழகிரிசாமி பயின்றார்) அந்த கூட்டத்தை தொடர்ந்து நடத்தி கொண்டு இருந்தவர்கள் , நான் படித்த ஆயிர வைஸ்ய வுயர்நிலை பள்ளி தமிழாசிரியர் புலவர் மு.படிக்கராமு அவர்களும் கோவில்பட்டி கோ.வே.நா.கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த பேரா.அ. சங்கரவள்ளிநாயகம் அவர்களும். இவர்கள் இருவரையும் இணைபிரியாத இலக்கிய இரட்டையர்கள் என்று தான் சொல்லவேண்டும். கூட்டத்துக்கு சுமார் முப்பது அல்லது நாற்பது பேர் வருவார்கள். தமிழ் இலக்கியத்தின் வளமை குறித்து பல அறிஞர்கள் பேசுவார்கள். பேரா.வளனரசு , திரு.சி.சு.மணி, பேரா.இளம்பிறை மணிமாறன் , தசாவதானி ராமையா , தமிழ்கனல் என பல அறிஞர்களின் பேச்சினை கேட்டு வளர்ந்தேன்.எனக்கு தமிழ் இலக்கியத்தின் மீது ஆழமான ஈடுபாடு ஏற்பட்டது இப்படிதான்.

ஒவ்வொரு மாதமும் தவறாது கூட்டம் முதல் ஞாயிறு அன்று நடைபெறும். வருட கடைசியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெறும்.அதில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கவியரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள்...அதில் பொது மக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள். அந்த பொது மேடையில் ஆயிரகணக்கான மக்கள் முன்னிலையில் , அந்த ஆண்டின் பனிரெண்டு கூட்டங்களும் தவறாது கலந்து கொண்ட அன்பர்களுக்கு மு.வ.தெளிவுரை எழுதிய திருக்குறள் அன்பளிப்பாக வழங்குவார்கள். அதை எப்படியும் வாங்கிவிடனும் என்ற தீராத வேட்கையுடன் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொள்வேன். நான் எட்டாவது படிக்கும் போது இப்படி சென்று கொண்டு இருக்கும்போது கடைசி மாத கூட்டத்துக்கு போக முடியாதபடி எனக்கு காய்ச்சல்..பதினோரு கூட்டத்தில் கலந்து கொண்டு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனில் நமக்கு திருக்குறள் புத்தகம் கிடைக்காதே என்ற எனது ஆதங்கத்தை யாரிடம் சொல்லி அழ ? என் அப்பா இதை புரிந்து கொண்டார். அந்த ஆண்டு நடைபெற்ற ஆண்டுவிழாவில் நான் வருத்ததுடன் கலந்து கொண்டேன். பனிரெண்டு கூட்டங்களும் கலந்து கொண்ட பதிமூன்று பெயர்களை புலவர் மு.படிக்கராமு அவர்கள் வரிசையாய் வாசித்து வந்தவர் இறுதியில் பதினாலாவது பெயராக எனது பெயரை சொல்லி என்னை மேடைக்கு அழைத்தார். அதை நினைக்கும் போது இப்போது நினைத்தாலும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.
உடல்நலம் சரி இல்லாததால் கடைசி கூட்டத்தில் இவர் கலந்து கொள்ளவில்லை என்று அறிந்து இவருக்கு இந்த பரிசு அளிக்கபடுகிறது என்று அவர் சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது ? பலரும் எனது பெயரை இன்று வரை தப்பும் தவறுமாய் உச்சரிக்கும்போது , எனது ஆசான் புலவர் மு.படிக்கராமு அவர்கள் என்னை " பூவே ...மேடைக்கு வா.." என்று அன்போடு அழைத்தார்..என்னை எப்போதும் பூ என்று தான் அழைப்பார். அவரிடம் நான் பயின்றது நான் பெற்ற பேறு தான். அன்று முதல் நான் தொடர்ச்சியாக எல்லா திருவள்ளுவர் மன்ற கூட்டங்களுக்கும் செல்ல ஆரம்பித்தேன்..பின்னாட்களில் நான் த.மு.எ.ச.கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதற்கு இதுவே உத்வேகம் அளித்தது என்று சொல்லலாம்.
அப்படிப்பட்ட திருவள்ளுவர் மன்றத்தினர் என்னை பேச அழைத்தார்கள் என்றால் எனக்கு கசக்குமா என்ன ...
உற்சாகமாக கலந்து கொண்டு பேசினேன்..சுமார் அறுபது பேர் கலந்து கொண்டார்கள்..என்ன எனது பேராசிரியர் அய்யா சங்கரவள்ளிநாயகம் அவர்கள் இல்லை..காலமாகிவிட்டார்..அவரது மகன் முத்து இருந்தார்..படிக்கராமு அய்யா நெல்லையில் வந்து செட்டில் ஆகியிருந்தார்கள்..எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டன..பேருந்து ஏறும் போது நிர்வாகிகளுள் ஒருவர் எனது பையில் ஒரு கவரை திணித்தார்..என்ன என்று கேட்டேன்..பயணப்படி என்றார்..நான் மறுத்தேன். .அவர் புன்சிரிப்புடன் மறுத்து சென்று விட்டார்..அந்த கவரை எனது பொக்கிசமாய் வைத்து இருக்கணும் போல இருந்தது..

Thursday, March 29, 2012

மானுட உணர்வுகளை மீட்டெடுக்கும்

மெல்லிய பதிவுகள்

எஸ் வி வேணுகோபாலன்


ழக்கமாக நாம் நடந்து போகும் தெருவில் ஏதோ ஒரு வீட்டை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போது ஆரம்பித்தார்கள் என்று கூடத் தெரிவதில்லை. வீதியில் மிஞ்சியிருக்கும் ஐந்தாறு பழைய கால வீடுகளில் இன்னொன்றும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. வாசல் பக்க மரம் ஒன்றில் பழைய பர்மா தேக்கு மரக் கதவு, சன்னல், தூண் இதரவை இங்கே கிடைக்கும் என்று ஒரு பலகை அடித்துத் தொங்கவிடப்பட்டிருக்கிறது ...ஆனால் அந்த வீட்டுக்குள் காலகாலமாக அந்தக் குடும்பத்தவர்கள் வம்சாவழியாய் வாழ்ந்த வாழ்க்கை எங்கேனும் கிடைக்குமா என்று யாருக்கும் தோன்றினால் பெருக்கெடுக்கும் உணர்ச்சி இருக்கிறதே, விம்மலும் தன்னெழுச்சியாகக் கன்னங்களைச் சூடாக்கியபடி வழியும் கண்ணீரும், நாம் மனிதர்களாக இருக்கிறோம் என்று பொருள்.

மனிதர்களையும் மனித உறவுகளையும் சரக்காக ஆக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தாராளமய காலத்தில், செடி கொடிகளையும், பயிர் பிரதேசங்களையும், இல்லங்களையும் அவற்றோடு கலந்திருக்கும் வாழ்க்கையோடு இணைத்து உயிரோட்டமாக தரிசிக்கும் உணர்வை படைப்பாளிகள் எழுத்திலேயே சாத்தியமாக்கினால் வாசகருக்கு அதைவிட கொடுப்பினை வேறென்ன இருக்க முடியும்? நாறும்பூநாதனின் ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன் என்ற சிறுகதை தொகுப்பு அப்படியான ஓர் அனுபவத்தைக் கொடுத்தபிறகு, அந்த அவஸ்தையிலிருந்து கொஞ்சம் எடுத்துப் பேசா விட்டால் எப்படி?

இருப்புப் பாதையின் இடையே கடக்கும் சாலையில் பயணம் செய்பவர்களுக்கு அந்த கதவுகளை சார்த்தித் திறப்பவர் (அவர் உள்ளபடியே அதைத் திறந்து கொடுத்து அப்புறம் தேவைக்கு சார்த்துபவர். அப்படி யாரும் அவரது பணியைப் புரிந்து கொள்ள முற்படுவது இல்லை!) அந்த வழி வாகனங்களில் போகும் யாருக்கும் உவப்பான மனிதர் இல்லை. ஆனால் சாமிக்கண்ணு நேர வாரியாக, வாகன விலாவரியாக அன்றாடம் கடந்து போகும் மனிதர்களைச் சொந்தம் பிடித்து வைத்திருக்கும் ஒரு பணியாளர். அதனால் அவர்கள் வரும் நேரம் தப்பி விட்டால் என்னவோ ஏதோ என்று அலைமோதும் மனசு. அதைத் தானய்யா மானுட உணர்வென்பது. "ரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்" கதை, சாமிக்கண்ணுவின் பணி ஓய்வு நாளில் அவரது நினைவுக்குறிப்புகளை அசை போட வைக்கிறது. படிக்க வாய்ப்பற்ற குழந்தைகளை, அதுவும் பெண் குழந்தைகளை வெள்ளரிப் பிஞ்சு விற்கப் பார்த்துப் பதறும் அவரது நெஞ்சு, ஆங்கிலத்தில் ஃபெயிலானதால் அரளி விதை அரைத்துக் குடித்துச் செத்துப் போன தமது சொந்த மகளது நினைவால் மேலும் வாட்டம் கொள்கிறது. கேட் போட்ட பிறகு சைக்கிளோடு கடக்கப் போகும் சிறுமி ஒருத்தியை வீட்டுல சொல்லிட்டு வந்தியா என்று கண்டித்தபடி ஓடிச் சென்று காக்கும் அவரிடம், மாலை வீடு திரும்பும்போது வந்து நன்றி சொல்லும் சின்னப் பெண், காலையில் வீட்டில சொல்லிட்டுத் தான் வந்தேன், ஏன் கேட்டிங்க என்று கேட்பது, அவரை மட்டுமல்ல வாசகரையும் சேர்த்துப் புரட்டிப் போடும் இடம். அவர் கையில் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தாத்தா என்று வாஞ்சையுடன் அழைக்கும் எந்தக் குரலுக்காகவும் காத்திருக்க, குழந்தைகள் பாதையைக் கடந்து போய்க் கொண்டிருக்க, அவரது பணிக்காலமும் கடந்துவிடப் பார்க்கும் வலி மிகுந்த பொழுதில் வேதனையோடு முடிகிறது. தொகுப்பின் சிறப்பான கதையாகப் பட்டது எனக்கு.

"ஆற்றுப்படுத்துதல்" கதை, அன்பான நண்பரது குடும்பத்தில் திடுதிப்பென்று மறிக்கும் அவரது மனைவியின் மரணச் செய்தியினால் சூழும் நினைவுகளோடு வேக வேகமாக இன்னொரு நண்பரோடு அந்த ஊர் நோக்கிப் பயணப் படுவதைச் சொல்கிறது. சாவு எடுக்கப்பட்டபின் சற்றே காலம் தள்ளிப் போய்ச் சேருவது யாருக்குமே சங்கடத்தையும், உளைச்சலையும் கூட்டும். பரிச்சயமான முகத்தை இனி ஒரு போதும் பார்க்க முடியாத வலி அது. அப்படியான நேரத்தில் துணையை இழந்து நிற்பவரைப் பார்க்கவும் நெருடும். இத்தனை உணர்வுகளைத் தூண்டும் கதை.

வாழ்க்கைக் கணக்கில் தோற்கும் கணக்கு வாத்தியார் (சூத்திரங்கள்), சாதி விட்டு சாதி திருமண அழைப்பிதழைக் காலத்தின் விதியாய்ச் செரித்துக் கொள்ளும் குடும்பப் பெரியவர் ( "அவரவர் மனசு போல.."), எல்லாம் இருந்தும், குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போடச் சொல்லும் அன்புக் கணவனால், வீட்டில் எதுவுமே இல்லாதபடி ஆக்கும் எந்திரகதியான ஐ டி வாழ்க்கையில் தவிக்கும் மனைவி (அவனும் அவளும்), கல்விக் கடனுக்குத் திண்டாடும் பொறுப்புள்ள தந்தையின் நிச்சயமற்ற அலைச்சல்கள் (இன்றும் நேற்றே), இனம் புரியாத முரட்டுத் தனத்தில் வாழ்க்கையைக் கடத்தும் இளைஞனிடமும் துளிர்க்கும் ஒரு நேயம் (முட்பூ)....என வெவ்வேறு தளங்களில் வாழ்க்கையின் வித விதமான காட்சிகளை நாறும்பூ தமது இளகிய மொழியின் கயிற்றில் அவற்றின் வண்ணம் போகாத வண்ணம் அலசி உலர்த்திப் போட்டிருக்கிறார்.

வீட்டுச் சாமான் களவு போனதைத் தாம் மன்னித்து மறந்தாலும், வேறொரு களவில் அகப்படும் கள்வன் காட்டிக் கொடுத்துவிட, அதற்கான சாட்சிக்கு காவல் நிலையத்துக்கும், நீதிமன்றத்திற்கும் நடையாய் நடக்கும் நடுத்தர மனிதர்களின் கதை ("யாருக்குத் தண்டனை") நமது சட்டம், நீதி நடைமுறைகளின் முரண் தன்மை குறித்து நல்ல நகைச்சுவை குரலில் பேசுகிறது. முதியவர்களின் மரணம் வீட்டில் இருப்போரையும் விடுதலை செய்யும் விதமாய் நிகழ வேண்டும் என்று பேசும் (இலை உதிர்வதைப் போல்) கதை, ஒரு பெண் தனது பிரியத்திற்குரிய தாயை நினைவு கூறும் மதிப்பான சொற்களில் படைக்கப்படுகிறது.

தந்தையின் கடுமையான விதிமுறைகளால் பாதிக்கப்படும் வாழ்க்கை சென்ற தலைமுறைகளின் இளசுகள், பெரிசுகள் யாவருக்கும் ஓரளவு பொதுவானது. பலாச்சுளை போல் முள்ளாலான கடினமான மேற்புறத்திற்குள் பொதிந்திருக்கும் அப்பாவின் வாஞ்சையை வெவ்வேறு விதமாய்க் கொணரும் "அப்பாவின் கடிதம்", "கையெழுத்து" கதைகள், ஒளிவு மறைவற்ற எதிரெதிர் கருத்தாக்கங்களுக்கிடையே பாறைக்கிடையே கசியும் சிலீரென்ற தூய்மையான நீரைத் தொடும் உணர்ச்சியைத் தருகின்றன. "ஹைக்கூ கவிதை" பெரிய மனுஷியாக வலம் வரும் சிறுமியிடம் குழந்தையாக மாறத் துடிக்கும் மனிதரின் மெல்லுணர்வின் தடம். இந்தக் கதைகளில் நாறும்பூவின் சொந்தத் தடயம் அதிகம் இருப்பதாகப் படுகிறது.

தலைப்புக் கதை, நன்கு இழைத்துச் செய்யப்பட்டிருக்கும் எழிலான மரச்சிற்பம். நண்பன் மறைவதோடு நட்பு மறைவதில்லை. நினைவுகள் கூட அகலுவதில்லை. ஆனால் அவன் இருந்தபோது போய்ப் பழகிய குடும்பத்தோடான உறவின் இழைகள் நைந்துவிடுகின்றன. நகர வாழ்க்கையின் தீர்மானிக்கப்பட்ட கால அட்டவணையில் இதற்கெல்லாம் நிகழ்ச்சி நிரலும் போடப்படுவதில்லை. தனக்கு அற்புத இலக்கியப் பக்கங்களை வாசிக்கப் பழக்கிக் கொடுத்தவனது நினைவை அங்கிருக்கும் ஒரு புத்தகத்தோடு எடுத்துக் கொண்டு நகர முயலும்போது, அதோடு போய்விடுவதில்லை, குடும்பத்தையும் நினைத்துக் கொள்ளுங்கள் என்று நண்பனின் மனைவி ஒரு கேவலால் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தும் "ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்" கதை வாசிப்பவரைத் தொடர் சிந்தனையிலும், நினைவுகளிலும் ஆழ்த்தும்.

நெல்லை வட்டார வழக்கின் சுவையான உரையாடல் மணக்க, பெரும்பாலும் சொற்சித்திரங்களாக நகரும் விவரிப்புகளில் மனித உணர்வுகளை மீட்டெடுக்கும் வேட்கை பரவிக் கிடக்கிறது. இடித்துவிட்டுப் போன பழைய வீடாய் நமது பண்பாக்கங்களை உலகமயம் உரு சிதைத்துக் கொண்டிருக்கிறது. அதன் கூறுகள் பழைய பர்மா தேக்கு மரக் கதவுகளாக, சன்னல்களாக இன்னும் மதிப்போடு கேட்பார்க்கு வாய்க்கும் வண்ணம் அறிவிக்கப்படுகிறது. அதன் ஒரு மெல்லிய பதிவாக விரிகின்றன இந்தத் தொகுப்பின் சிறுகதைகள்.

வம்சி புக்ஸ் நிறுவனத்திற்கும், சிறப்பான அட்டை ஓவிய வடிவமைப்பு செய்திருக்கும் ராஜ்குமார் ஸ்தபதிக்கும் பாராட்டுதல்கள். தோழமை நேயம் மலர முன்னுரை வழங்கியிருக்கும் எழுத்தாளர் உதயசங்கரின் எழுத்து, வாசகருக்கு ஒரு வரவேற்புரை.

ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்
சிறுகதை தொகுப்பு
நாறும்பூநாதன்
வம்சி புக்ஸ்
19 டி எம் சாரோன், திருவண்ணாமலை
112 பக்கங்கள். விலை ரூ.70/-

Saturday, March 24, 2012

Book released


( Literary critic Thi. Ka. Si. releasing the book and film director Sugha receiving the first copy )


Writer Naarumpoonathan's ‘Jameelaavai yenakku arimugappaduththiyavan' book release function was held here on Saturday. Veteran literary critic Thi. Ka. Si. released the book and film director Sugha received the first copy. Writers Vannadasan, Udhayasankar, Zakhir Raja and Selvaraj spoke. Veteran writer Thoppil Mohamed Meeran, artist Pon. Vallinayagam and others participated. Performance by singers ‘Karisal Kuyil' and Thiruvudaiyaan, known for his song ‘Aaththaa un selai…', set an apt prelude to the book release function.


Thanks : The Hindu , February 7, 2012

Thursday, March 22, 2012

முகப்பு » ரசனை

நாறும்பூமாலை

‘என்னோட ரெண்டாவது புஸ்தக வெளியீட்டு விளாவுக்கு நீங்க அவசியம் வரணும்’.

இரண்டு மாதங்களுக்குமுன்பே சொல்லிவிட்டார், எழுத்தாளர் நாறும்பூநாதன். நாறும்பூநாதன் என்ற பெயரில் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார் என்னும் செய்தியே எனக்கு ஓராண்டுக்கு முன்னர்தான் தெரிய வந்தது.சொன்னவர் நாஞ்சில் நாடன் சித்தப்பா. திருப்புடைமருதூர் சிவபெருமானின் பெயரான நாறும்பூநாதனின் பெயரை வைத்துக் கொண்டு ஒரு மனிதர் நடமாடுகிறார் என்ற செய்தியும், அதிலும் அவர் எழுதுகிறவர் என்கிற கூடுதல் தகவலும் என்னை ஆச்சரியப்படுத்தின. இத்தனைக்கும் அவர் திருநெல்வேலியிலேயே வேறு இருக்கிறார்.

நாறும்பூநாதனை நான் கேள்விப்பட்டிருந்த சில மாதங்களிலேயே என்னைப் பார்க்க வந்திருந்தார். இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி சென்றுவிட்டு சென்னைக்குக் கிளம்பிக் கொண்டிருந்த என்னை அவர் வந்து சந்தித்த போது, ஆனந்த விகடனில் நான் ‘மூங்கில் மூச்சு’ தொடர் எழுதிக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் அவர் என்னுடைய ‘தாயார் சன்னதி’ புத்தகத்தையும் படித்து முடித்திருந்தார். முதன்முதலில் சந்தித்தபோது எங்கள் இருவரையுமே இணைத்தது ‘கூச்சம்’. தன் ‘பளபளக்கும்’ தலை குனிந்து அவரும், கண்ணை மறைக்கும் சிகை ஒதுக்கி நானும் அவ்வப்போது ஒருவர் முகம் மற்றவர் பார்த்து ஒரு சில வார்த்தைகள் பேசிக் கொண்டோம்.

சென்னைக்கு நான் திரும்பிய பிறகு இயல்பாக ஒருசில மின்னஞ்சல்களிலும், தொலைபேசி அழைப்புகளிலும் பேசிக் கொண்டோம்.அதன்பின் நான் திருநெல்வேலிக்குச் செல்லும் போதெல்லாம் நாறும்பூநாதனைச் சந்திக்காமல் வருவதில்லை.எங்கள் சந்திப்பில் தவறாது இடம்பெறக்கூடிய மற்றொருவர், ஜானகிராம் ஹோட்டலின் பங்குதாரரோ என்று ஆரம்பத்தில் நான் சந்தேகித்த ‘கவிஞர்’ க்ருஷி. க்ருஷி ஸார்வாளும், திருநெல்வேலியின் ஜானகிராம் ஹோட்டலும் சாகித்ய அகாடமி விருதும், சர்ச்சையும் போல பிரித்துவிடவே முடியாத மாதிரி அவ்வளவு நெருக்கம். இரண்டு மாதங்களுக்குமுன்ஒருமாலைவேளையில் ஜானகிராம் ஹோட்டலின் Roof gardenஇல் வைத்துத்தான் தோழர் நாறும்பூநாதன் தனது இரண்டாம் புத்தக வெளியீட்டு விழா பற்றிச் சொன்னார். ‘தம்பி, நீங்க வரலேன்னா இந்த விளா நடத்தியே ப்ரயோஜனமில்ல பாத்துக்குங்க’. சரித்திர நாடகங்களில் நடிக்கும் ஹெரான் ராமசாமியின் குரலை ஞாபகப்படுக்கிற ஒலியில் க்ருஷி ஸார்வாள் கொஞ்சம் கண்டிப்புடன் சொன்னார்.

narumbu-invi-final-2

திருநெல்வேலிக்கு வர இருப்பதை வழக்கம்போல குஞ்சுவுக்கும், பின் மீனாட்சிக்கும் சொல்லியிருந்தேன்.நெல்லை எக்ஸ்பிரெஸ்ஸில் போய் இறங்கியவுடனேயே மீனாட்சி ஃபோனில் அழைத்தான்.

‘வந்துட்டேளா சித்தப்பா?நான் எப்பொ எங்கெ வரணும்?’

‘சாயங்காலம் ஜானகிராம் ஓட்டலுக்குப் போகணும். வந்துரு.’

‘விஞ்சைக்குப் போயிருவோமெ!நாளாச்சுல்லா.அண்ணாச்சியும் ஒங்கள பாத்தா சந்தோசப்படுவா’.

‘ஏ மூதி!திங்கிறதுலயெ இரி.ஜானகிராம் ஓட்டல்ல நம்ம நாறும்பூ ஸாரோட பொஸ்தகம் வெளியிடுற விளால’.

‘பொஸ்தவமா?சரியாப் போச்சு. எனக்கும் எலக்கியத்துக்கும் என்ன சித்தப்பா சம்பந்தம்?நீங்க போயிட்டு வாங்க’.

‘எல எனக்கு மட்டும் என்ன சம்பந்தம் இருக்கு? மதிச்சு கூப்பிடுதாங்க. வராம இருந்திராத’.

சாயங்காலம் மேலரதவீதி வழியாக குஞ்சு, மீனாட்சியுடன் காரில் சென்று கொண்டிருக்கும் போது ’சோனா’ மாமா கடையை அடுத்த சுவரைக் காண்பித்து மீனாட்சி ‘சித்தப்பா, அங்கெ பாருங்க’ என்றான். ‘எழுத்தாளர் நாறும்பூநாதனின் புத்தக வெளியீட்டு விழா’ போஸ்டர் ஒட்டப்பட்டிருந்த்து . பெரிய எழுத்தில் ‘சுகா’ என்று அச்சிடப்பட்டிருந்ததைப் பார்த்தவுடன் சங்கடமாக இருந்த்து. ‘சே என்னல இது? பெரிய பெரிய ஆட்கள் பேரயெல்லாம் சிறுசா போட்டு நம்ம பேர அத்தா தண்டிக்கு போட்டிருக்கங்க?’ என்றேன். ’என்ன சித்தப்பா இப்பிடி சடச்சுக்கிடுதிய! மூங்கில் மூச்சு என்னா ரீச்சுங்கிய! அத படிச்சுட்டு நம்ம ஊர்ல எத்தன பேரு ஒங்கள பாக்கணுன்னு துடியா துடிக்காங்க, தெரியுமா?’ என்றான், ‘மூங்கில் மூச்சு’ தொடரின் ஒரு அத்தியாயத்தைக் கூட இன்றுவரை படித்திராத மீனாட்சி.

ஏற்கனவே கொஞ்சம் தாமதமாக போகலாம் என்று குஞ்சு சொல்லியிருந்தான். ‘எல நீதான் சீஃப் கெஸ்ட்டு. நீ மொதல்லயெ போயி பறக்க பாத்துட்டு உக்காந்திருக்கக் கூடாது.கொஞ்சம் லேட்டா போனாத்தான் ஒரு பரபரப்பு இருக்கும்’. அவன் எதிர்பார்க்கிற பரபரப்பில் நானே பயந்து விடுவேன் என்பது அவனுக்கு நன்கு தெரிந்திருந்தும், ஏனோ அதற்கு ஆசைப்பட்டான். ’சும்மா கெடல, கோட்டிக்காரப்பயலெ’ என்று சொல்லிவிட்டு, சரியான நேரத்துக்கே டவுணிலிருந்து கிளம்பிவிட்டேன். ஆனாலும் அன்றைக்குப் பார்த்து ‘மக்கள் தளபதி’ ஜி.கே.வாசன், ‘அரசியல் துருணோச்சாரியார்’ ப.சிதம்பரம், ‘இளம் பெரியார்’ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘இளைய தலைவர்’ கார்த்தி சிதம்பரம் போன்றோர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டதுக்காக நகர் முழுவதும் பேனர்களும், வரவேற்புத் தோரணங்களும், வாகனங்களுமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக டவுணிலிருந்து ஜங்ஷன் செல்ல பத்து நிமிடங்கள் ஆயின. வழக்கமாக பதினைந்து நிமிடங்களில் சென்று விடலாம்.

ஜானகிராம் ஹோட்டலின் மாடிப்படிகளில் அவசர அவசரமாக ஏறினோம். விழா நடைபெறும் வாசலில் நாறும்பூநாதனும், க்ருஷி ஸார்வாளும் நின்று கொண்டிருந்தனர்.‘தம்பி, இன்னும் ஒங்க காலு சரியாகல போல தெரியுதெ!’ க்ருஷி ஸார்வாளின் தொண்டை வழியாக ஹெரான் ராமசாமி என்னிடம் அக்கறையாகக் கேட்டார்.‘எல்லாரும் வந்தாச்சு.உள்ள வாங்க’.கைபிடித்து அழைத்துச் சென்றார் நாறும்பூநாதன்.உள்ளே தி.க.சி தாத்தா, தோப்பில் முகம்மது மீரான் அண்ணாச்சி, நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி போன்றோர் அமர்ந்திருந்தனர்.நீண்ட வருடங்களுக்குப் பிறகு நான் பார்த்த ’வானம்பாடி’ சங்கர் சித்தப்பாவின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டேன்.மேடையில் ‘திருவுடையான்’ தபலா வாசித்துக் கொண்டே அருமையாகப் பாடிக் கொண்டிருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு மதுரை புத்தகக் கண்காட்சியின்போது திருவுடையானின் கச்சேரியைக் கேட்டு ரசித்து, அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஞாபகம் வந்தது. தாளவாத்தியம் வாசித்துக் கொண்டே பாடுவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. முயன்று பார்த்தால்தான் தெரியும். பலமுறை முயன்று கேவலப்பட்டிருக்கிறேன்.(அதேபோலத்தான் ஒரு கையில் மணியும், மற்றொரு கையில் தீபாராதனையும் காட்டுவது. முயன்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்).திருவுடையானுக்கு முன்பே ‘கரிசல் குயில்’ கிருஷ்ணசாமி பாடிவிட்டதாகச் சொன்னார்கள். அவர் குரலைக் கேட்க முடியாமல் போனதில் வருந்தினேன். திருவுடையானைப் பற்றி ஒருமுறை இளையராஜா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ’ஸார், திருவுடையான்னு ஒரு பாடகர். கம்யூனிஸ்ட் கட்சி மேடைகள்ல . . .’ நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்து, ‘ஆங், தெரியும். ‘விருமாண்டி’ பட்த்துல ‘கருமாத்தூர் காட்டுக்குள்ளே’ பாட்டு பாட வச்சிருந்தேனே’ என்றார்.

என்னை உள்ளே அனுப்பிவிட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்த குஞ்சு பதற்றமான முகத்துடன் உள்ளே வந்து என்னருகில் அமர்ந்து கொண்டான்.

‘ஏம்ல ஒருமாரி இருக்கெ?’

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மெதுவான குரலில் கிசுகிசுத்தான்.‘வாசல்ல படியேறி வார ஒவ்வொருத்தர்க்கிட்டெயும் க்ருஷி ஸார்வாள், இந்தா நிக்காரு பாத்தேளா!இவாள்தான் ‘மூங்கில் மூச்சு’ல வார குஞ்சு’ன்னு அறிமுகப்படுத்த ஆரம்பிச்சுட்டா.விட்டா என் நெத்தில திருநாறு பூசி கைல கவர் குடுத்துருவாங்களோன்னு பயமாயிட்டு. அதான் நைஸா உள்ள வந்துட்டென்.’

release

தி.க.சி தாத்தா, ‘தேநீர்’ நாவலாசிரியர் டி.செல்வராஜ் ஐயா, வண்ணதாசன் அண்ணாச்சி, எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா, எழுத்தாளர் உதயசங்கர் போன்றோருடன் மேடையில் உட்கார்ந்திருக்கும் போது மனதுக்குள் தயக்கமாகவே இருந்தது. அசல் எழுத்தாளர்களான இவர்களுடன் சரிசமமாக என்னையும் உட்கார வைத்திருக்கிறார்களே என்கிற சங்கோஜம் விழா முடியும்வரை என் மனதைவிட்டு அகலவே இல்லை. இந்த விழாவில் தோழர் பவா செல்லத்துரையும், அவரது துணைவியார் கே.வி.சைலஜாவும் கலந்து கொள்வதாக இருந்தது. அவர்கள் இருவருமே எனக்கு தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழி உறவுக்காரர்கள். நேரில் சந்திக்கக் காத்திருந்தேன். விழாவன்று காலையில்தான் அவர்கள் வரவில்லை என்னும் செய்தியை நாறும்பூநாதன் சொன்னார். குறிப்பாக தோழர் பவா செல்லத்துரையைச் சந்திக்க அதிகம் விரும்பினேன். காரணம், புகைப்படங்களில் அவரைப் பார்க்கும் போது என்னைவிட அவர் நிறம் என்று தோன்றுகிறது. அருகருகில் அமர்ந்து டெஸ்ட் செய்து பார்க்கும் வாய்ப்பு நழுவிப் போனதில் வருத்தம்தான்.

speech

ஒவ்வொருவர் பேச்சிலுமிருந்து ஒவ்வொரு வரியை உருவி குத்துமதிப்பாகப் பேசி சமாளித்து விடலாம் என்ற யோசனையில் சிந்திப்பது போன்ற பாவனையுடன் அமர்ந்திருந்த என்னை அநியாயத்திலும் அநியாயமாக முதலிலேயே பேச அழைத்து விட்டார்கள். நான் உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து மைக் இருக்கும் இடத்துக்கு ஒருமாதிரியாக நீந்திச் சென்றடைந்தேன்.‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ எழுதிய நாறும்பூநாதனை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள்’ என்று நான் பேசிய முதல் வரி மட்டும்தான் என் காதில் விழுந்தது. என் பேச்சுக்கு நடுவே நான்கைந்து இடங்களில் கைதட்டலெல்லாம் கூட கேட்டது. என்ன பேசினேன் என்றுதான் தெரியவில்லை.தோழர் நாறும்பூ வீடியோ ஏற்பாடு செய்திருந்தாரா என்று கவனிக்கவில்லை. ஒருவேளை எடுத்திருந்தால் அதைப் பார்த்து நான் பேசியதைத் தெரிந்து கொள்ள ஆவல்.ஒரு எழுத்தாளனை ஊக்குவிக்கும் விதமாக மிகச் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து தி.க.சி தாத்தாவிலிருந்து அனைவருமே பேசினார்கள்.அநேகமாக எல்லோருமே எழுதி கையோடு கொண்டு வந்திருந்த குறிப்புகளுடன் பேசினார்கள். அதுவும் கீரனூர் ஜாகீர் ராஜா ஒரு முழுநீள கட்டுரை எழுதி வந்து குரல் நடுங்க வாசித்து முடித்து, என்னருகில் அமர்ந்து ஒட்டுமொத்த மேடையையும் லேசாகக் குலுக்கினார்.‘நாறும்பூரெண்டாம் புஸ்தகம் எளுதியிருக்கதெ எனக்கு இன்னைக்குதானெ தெரியும்’ என்கிற விதமாக தோப்பில் அண்ணாச்சி படு இயல்பாகப் பேசினார்.வண்ணதாசன் அண்ணாச்சி தன் பேச்சில் எழுத்தாளர் உதயசங்கரின் எழுத்துகளை சிலாகித்துச் சொன்னார்.சமீபத்தில்தான் உதயசங்கர் எழுதிய ‘முன்னொரு காலத்திலே’ புத்தகத்தைப் படித்திருந்தேன் என்பதால் வண்ணதாசன் அண்ணாச்சியின் பாராட்டு சரியாகவே இருந்தது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்த்துச் செய்தியை தோழர் பாஸ்கரன் மேடையில் வாசித்தார்.அதில் சற்றும் எதிர்பாராவிதமாக என்னை பாராட்டி கூச்சத்தில் நெளிய வைத்தன சில வரிகள்.அதை மிஞ்சும் விதமாக ஐயா டி.செல்வராஜ் அவர் பங்குக்கு என்னை கலவரப்படுத்தினார்.‘ஒங்க எளுத்து எனக்கு ரொம்பப் புடிக்கும்.நான் எளுதுன ‘தோல்’ நாவல படிச்சு பாத்து ஒங்க அபிப்ராயத்த எளுதுங்க’.

விழா முடியும்வரை குஞ்சு ஒருவித பதற்றத்துடனேயே இருந்ததை கவனித்தேன்.‘ஏம்ல வெளக்கெண்ணெ குடிச்சா மாரியே இருக்கெ?’ என்று கேட்டதற்கு, ‘போலெ போ. எந்த நேரம் க்ருஷி ஸார்வாள் மேடையேறி ‘அடுத்து ‘மூங்கில் மூச்சு’ புகழ் குஞ்சு ‘நான் ஆளான தாமர’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார்’னு சொல்ல்லீருவாரோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன்’ என்றான்.

தோழர் நாறும்பூநாதனை நான் போய் பாராட்டாவிட்டாலும் அவர் பாரட்டுக்குரியவர்தான். தொழிற்சங்க வேலைகளுக்கு இடையே அவ்வப்போது எழுதிவருகிற அவர், இனிவரும் காலங்களில் நிதானமாக எழுதுகிற பட்சத்தில் இன்னும் வலுவான கதைகளை அவரால் எழுத முடியும் என்பது என் அபிப்ராயம். இந்த விழாவில் நான் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமான ஓர் உதவியை நாறும்பூநாதன் செய்தார். சொல்வனம் பிரசுரம் வெளியிட்ட எனது ‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பில் இடம்பெற்றிருக்கிற ‘திருநவேலி’யின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் மற்றும் கோட்டோவியங்கள் தந்த படைப்பாளிகளை சொல்வனம் சார்பாக கௌரவப்படுத்தும் வாய்ப்பை தனது விழாமேடையிலேயே அமைத்துத் தந்தார்.

valli

[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் வள்ளிநாயகத்தின் ஓவியம் ஒன்று]

1081

[தாயார் சன்னதி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் இசக்கி எடுத்த ஒளிப்படம் ஒன்று]

காலம் சென்ற புகைப்படக் கலைஞர் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டியையும், ஓவியர் பொன் வள்ளிநாயகத்தையும் எழுத்தாளர் நாறும்பூநாதனின் ‘ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன்’ மேடை கௌரவப்படுத்தியது.


[சுகாவுடன் ஓவியர் பொன் வள்ளிநாயகம்]

[சுகாவுடன் அருண்குட்டி]

ஓவியர் வள்ளிநாயகம் எப்போதும் என்னுடன் தொடர்பிலேயே இருக்கிற என் தம்பி.ஆனால் இசக்கி அண்ணாச்சியையோ, அவரது குடும்பத்தினரையோ நான் அறிந்தவன் அல்லன். ‘வாத்தியார்’ பாலுமகேந்திரா அதிகம் சிலாகித்த இசக்கி அண்ணாச்சியின் புகைப்படங்கள் ‘தாயார் சன்னதி’ புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.இசக்கி அண்ணாச்சியைச் சந்தித்ததில்லை. ஆனால் சென்னைக்கு நான் ரயில் ஏறும்போதுரயில்வே ஸ்டேஷனில் இசக்கி அண்ணாச்சியின் புதல்வர் அருண்குட்டி வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டு சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் நின்றார். இசக்கி அண்ணாச்சியின் கைகள்தான் அவை.

Saturday, March 17, 2012

தகுந்த மதிப்பெண்கள் போடுவது எப்படி?

First Published : 17 Mar 2012 01:26:29 AM IST


ஜனவரி, பிப்ரவரி பிறந்துவிட்டால் போதும். பிளஸ் டூ பயிலும் மாணவ, மாணவியர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி? சுலபமாய் மதிப்பெண்கள் பெற நூறு டிப்ஸ், மேற்கொண்டு என்ன படிக்கலாம்? என்று ஊடகங்கள் விதவிதமாய் செய்திளை வெளியிடுகின்றன. பல்வேறு கல்வியாளர்களின் பேட்டிகள், உளவியல் நிபுணர்களின் பரிந்துரைகள்... மாணவர்கள் திக்கு முக்காடித்தான் போகிறார்கள். நல்லது.
இவற்றின் நீட்சியாக விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களின் பணி குறித்தும், விடைத்தாள் திருத்தும் மையங்களின் வசதிகள் குறைத்தும் பேச வேண்டிய அவசியம் உள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் பிளஸ் டூ தேர்வுகள் இறுதி வாரத்தில் முடிவடைகின்றன. இந்த விடைத்தாள்களுக்கு டம்மி எண்கள் கொடுக்கப்பட்டு வெவ்வேறு மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. கிட்டத்தட்ட எல்லா மாவட்ட தலைநகரிலும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் உள்ளன. மாவட்டத் தலைநகரில் எல்லா அடிப்படை வசதிகளும் அமைந்த பள்ளியை விடைத்தாள் திருத்தும் மையமாக அரசு தேர்வு செய்ய வேண்டும். இது மிக மிக முக்கியமானது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும். நல்ல காற்றோட்டமான வசதி கொண்ட வகுப்பறைகள் இருக்க வேண்டும். பேப்பர் திருத்தும் காலம் சரியான கோடை காலம் என்பதால் மின் விசிறி பொருத்தப்பட்ட அறைகளாக இருக்க வேண்டும். தடையற்ற மின்சாரம் இப்பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். (தற்போது தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்பு, ஏப்ரல் இறுதிவரை நீட்டிக்கப்பட வேண்டும்).
ஆசிரியர்கள் அமர்வதற்குச் சரியான இருக்கைகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். பல பள்ளிகளில் வகுப்பறை போதாமல், வேதியியல் ஆய்வுக்கூடங்களில் அமர்ந்து விடைத்தாள் திருத்திய அனுபவங்கள் ஆசிரியர்களுக்கு உண்டு. மின் விசிறி இல்லாமல், உஸ்... உஸ்... என்று பேப்பரால் விசிறிக் கொண்டு தூண்களில் சாய்ந்தபடி பேப்பர் திருத்தும் வயதான ஆசிரியர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது.
ஆசிரியர்களுக்கு நல்ல குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களது பாட்டிலில் தண்ணீர் கொண்டு வரும் சூழலே நீடிக்கிறது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு சிவப்பு பால் பேனாக்களை அரசே வழங்கலாம். இதுநாள்வரை ஆசிரியர்கள் தங்கள் சொந்தச் செலவிலேயே வாங்கி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் காலை 12 விடைத்தாள்களும், மாலை 12 விடைத்தாள்களும் ஒவ்வோர் ஆசிரியருக்கும் வழங்கப்படுகிறது. நிதானமாய் திருத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் குறைந்த எண்ணிக்கை. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அந்தந்தப் பள்ளியிலேயே இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. எனவே, அவர்கள் குளிப்பதற்கும், கழிப்பறை செல்வதற்கும் அடிப்படை வசதிகளை பள்ளிகள் செய்து தர வேண்டும். பராமரிப்பில்லாத கழிப்பறைகள், குளியலறைகள் இருக்கும்பட்சத்தில் பெண் ஆசிரியர்களோ, ஆண் ஆசிரியர்களோ தங்குவதற்குப் பயந்து, தினமும் தங்களது ஊர் சென்று திரும்புவார்கள். இரவு 7 மணிக்கு தங்களது ஊர் பேருந்தைப் பிடிக்க வேண்டிய அவசரத்தில் கடைசி நேரத்தில் பதற்றத்துடன் விடைத்தாள்களைத் திருத்துவார்கள். "அவனுக்கு நேரம் சரியில்லை' என்பார்களே... அது இதுதான்' இந்த நேரத்தில் ஆசிரியரின் கையில் எவன் பேப்பர் கிடைக்கிறதோ... அவனுக்கு "நேரம் சரியில்லை'தான். அந்தி சாயும் வேளையில், கண்ணாடி போட்டபடி அவசர அவசரமாய்த் திருத்த முற்படும்போது, தவறு ஏற்பட வாய்ப்பு அதிகம்!

ஆசிரியர்கள் மனநிலை சமநிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் விடைத்தாள் திருத்தும் மையத்திலேயே தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வீட்டுக்குச் சென்றால் மனைவி, குழந்தைகளுடன் ஏதேனும் சண்டை சச்சரவு ஏற்படும் சூழலில், அதன் வெளிப்பாடு விடைத்தாளில் பிரதிபலித்துவிடக் கூடாது என்பதுகூட பிரதான காரணங்களில் ஒன்று. ஆசிரியர்கள் இதை உணர வேண்டிய அதே நேரத்தில், பள்ளி நிர்வாகங்களும் இந்த அடிப்படை வசதிகளை நிறைவேற்றி வைக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையம், பேருந்து வசதி அடிக்கடி கொண்டதாக இருக்க வேண்டும். ஆசிரியர்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய இடமாக அமைய வேண்டும்.

திருத்தும் ஒவ்வோர் ஆசிரியரும், திருத்தும் வேளையில் தமது குழந்தைகளை நினைத்தபடி திருத்தினால் கவனம் சிதறாது. நிச்சயமாக மாணவச் செல்வங்கள் யாவருமே அவர்களது குழந்தைகள்தானே? இந்த விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் அழைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு முறையும் பிளஸ் டூ ஆசிரியர்களில் 75 சதவிகிதம் பேர் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர். பேப்பர் திருத்தும் பணியில் ஈடுபடாமலேயே பத்து ஆண்டுகளுக்கும் மேலான ஆசிரியர்களும் உள்ளனர். "மேலிட' செல்வாக்கு காரணமாக, அவர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடாமல் தப்பித்து விடுகின்றனர். இதில் பாதிக்கப்படுவது இவர்களிடம் பயிலும் மாணவர்கள்தாம்
. ஒரு வினாவுக்கு எப்படி விடை எழுத வேண்டும்? அதற்கு எந்த அடிப்படையில் மதிப்பெண்கள் பிரித்து வழங்கப்படுகிறது என்பதை விடைத்தாள் திருத்தி அனுபவப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமே தமது மாணவர்களுக்கு விளக்க முடியும். ஒப்பீட்டளவில் பார்த்தால் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் திருப்திகரமானது என்றே கூற வேண்டும். எனவே, ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியும் ஆசிரியப் பணியின் ஒரு பகுதியே என்பதை உணர வேண்டும்.

போட்டிகள் நிறைந்த இவ்வுலகில், ஒரு மதிப்பெண் குறைந்தால்கூட மாணவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. அரை மதிப்பெண்ணில் நல்ல பொறியியல் கல்லூரியை கோட்டை விடும் மாணவியும் உண்டு. எனவே, விடைத்தாளின் ஒவ்வொரு மதிப்பெண்ணும் மதிப்புமிக்கது.
மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே ஆசிரிய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதிகள்கொண்ட பள்ளியைத் தேர்வு செய்து முறைப்படி அறிவிக்கலாம். ஒவ்வோராண்டும் விடைத்தாள் திருத்தும் பணி என்பது நிரந்தரம் ஆனதால், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் விடைத்தாள் திருத்தும் மையம் என்ற கட்டடத்தை அரசே கட்டலாம். அதிலே அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர முடியும். ஏனைய நாள்களில், ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்கும் கூடங்களாகக்கூட அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மொத்தத்தில், விடைத்தாள் திருத்தம் மையங்கள், எல்லா அடிப்படை வசதிகளுடனும் இருந்தால் ஆசிரியர்கள் நல்ல மன நிலையில் பணி புரிய முடியும். நல்ல மனநிலையில் பணி புரிந்தால், மாணவர்களின் விடைத்தாள் நல்ல முறையில் திருத்தப்படும். அதைவிட வேறு "அதிர்ஷ்டம்' என்ன வேண்டும்?
நன்றி : தினமணி மார்ச் 17

Tuesday, December 6, 2011

டிசம்பர் மாதச் சித்திரங்கள்

First Published : 05 Dec 2011 02:59:17 AM IST


வெளியூர் சென்று திரும்பிய பாரதியார் இருண்ட அறையில் கிழிந்த பாயில் சோர்வாய் படுத்திருந்த நீலகண்ட பிரம்மச்சாரியாரைக் கலக்கத்துடன் பார்க்கிறார். அவர் மெதுவாய் எழுந்து சென்று மண்பானையில் இருந்த தண்ணீரைக் குவளையில் அள்ளிப்பருகிவிட்டு மீண்டும் வந்து பாயில் படுக்கிறார்.அதைக்கண்ட பாரதி, ""என்ன பிரம்மச்சாரியாரே, உடல் நலம் சரியில்லையா?'' என்று கவலையுடன் கேட்கிறார். அமைதியாய் இருந்தவரை, பாரதி மீண்டும் மீண்டும் வினவவே, அவர் கூறுகிறார் ""என்ன செய்ய? சாப்பிட்டு நான்கு நாளாகின்றன. தண்ணீரை மட்டும்தான் குடித்துக் கொண்டிருக்கிறேன்...'' என்று சொன்னாராம்.நெல்லை மாவட்டத்தில் சுதந்திரக் கனலைப் பற்ற வைத்த வ.உ.சி., பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோருடன் சேர்ந்து போராடிய ஆவேசத்துடன் முழங்கிய நீலகண்ட பிரம்மச்சாரியார் பட்டினியில் வாடி வதங்கிக் கொண்டிருப்பதைக் காணச் சகிக்காத அந்த முண்டாசுக்கவிஞன் அந்த நேரத்தில்தான் எழுதுகிறான்:"தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில்ஜகத்தினை அழித்திடுவோம்'என்று. அப்பேர்ப்பட்ட தியாகி நீலகண்ட பிரம்மச்சாரியின் பிறந்த நாள் டிசம்பர் 2.சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த ஒரு படக்கண்காட்சி தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தோம். எங்களோடு இருந்த எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரர் மதுரகவி பாஸ்கரதாஸின் பேரனுமான ச. தமிழ்ச்செல்வன், மீசை முளைக்காத ஓர் இளைஞரின் படத்தைக் காண்பித்து, ""இந்த இளைஞரைத் தெரியுமா?'' என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். எங்களுக்குத் தெரியவில்லை. அவர் கூறினார்.""இவர் பெயர் குதிராம் போஸ். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புரட்சிகரமான இளைஞர். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கிய வெள்ளைக்கார மாஜிஸ்டிரேட்டைக் கொலை செய்துவிட்டார். அப்போது அவருக்கு வயது 15. பிரிட்டிஷ் அரசு அவரைத் தூக்கில் போட முடிவு செய்தது. மேற்கு வங்க மக்கள் கொந்தளித்தனர்.குதிராம் போஸின் தாய் கதறினார். ""என் பச்சிளம்பாலகனை விட்டு விடுங்கள்'' என்று அரற்றினார்.குதிராம் போஸ் மனம் கலங்கவில்லை. தூக்கிலிடுவதற்கு முதல்நாள் இரவு, சிறைச்சாலையின் சுவற்றில் கரித்துண்டால் அவரது அம்மாவுக்கு ஒரு கவிதை எழுதினான்:""அழாதே அம்மா!நான் மீண்டும் பிறப்பேன்சித்தியின் வயிற்றில் மகனாக..பிறந்ததுநான்தான் என்ப தறியகுழந்தையின்கழுத்தைப்பார்அதில் -தூக்குக்கயிற்றின்தழும்பு இருக்கும்!அழாதே அம்மா!'' அந்த நேரத்தில் அவரது சித்திக்கு பிரசவ நேரம். அதனால் அவர் அப்படி எழுதிவிட்டு தூக்குமேடை ஏறினார். அதன்பிறகு மேற்கு வங்க மக்கள் குதிராம் போஸ் எழுதிய கவிதை வரிகளை சிறைச்சாலைச் சுவற்றில் தங்கள் கைகளால் தடவிப்பார்த்து ஆவேசமடைந்தார்கள். கிராமப்புறப் பாடல்களில் குதிராம் போஸின் வீரம் இன்றளவும் போற்றப்படுகிறது.''""அப்படியானால் நமது பாடப்புத்தகத்தில் இவர் பெயர் ஏன் இடம்பெறவில்லை?'' என்று கேட்டோம்.அவர் சிரித்தபடியே ""இந்த தேசத்தின் தலையெழுத்து அப்படி... பாடப்புத்தகங்களில் குதிராம்போஸýம் இல்லை. பகத்சிங்கும் இல்லை. செங்கோட்டையில் வெகுண்டெழுந்த வாஞ்சி ஐயரும் இல்லை. ஆனால், மத்திய அரசு தயாரித்த சுதந்திரப் போராட்ட வரலாற்று ஆவணத்தில் இவர்களது வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாமல் ஆவணக் காப்பகங்களில் பெரிய நூலகங்களில் இவர்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள்'' என்று வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். அந்த வரலாற்று நாயகர் குதிராம்போஸ் பிறந்த தினம் டிசம்பர் 3.""வல்லமை தாராயோ? - இந்தமாநிலம் பயனுற வாழ்வதற்கே''என்று சிவசக்தியிடம் வரம் கேட்ட எங்கள் நெல்லை மண்ணின் மகாகவி பாரதி பிறந்த தினம் டிசம்பர் 11.பள்ளியில் படித்தபோது நடந்த சம்பவம் இது. எங்கள் கணித ஆசிரியர் சுப்பிரமணிய ஐயர் (ஆரிய வைசிய உயர்நிலைப்பள்ளி, கோவில்பட்டி) அடிக்கடி கேட்பார்: ""ஸ்ரீரங்கத்தில் பிறந்த பிரபலமானவர் பெயரைக்கூறு'' நாங்கள் வேகமாகப் பதில் அளிப்போம். ""ஹேமமாலினி''.அவர் கோபத்தில் சாபமிடுவார் ""நீங்கள் யாரும் உருப்படவே போறதில்லை. அவரைவிட்டால் வேறு யாரையும் தெரியாதா?'' பின்பு சிறிதுநேரம் கழித்து ஆசுவாசமடைந்து அவரே கூறுவார்.""நடிகையின் பெயரைத்தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உலகத்து கணக்குப்புலிகளை எல்லாம் தனது புதிர்க் கணக்குகளால் மடக்கிய ராமானுஜத்தின் வரலாற்றையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்கடா... அவர் ஒரு கணித மேதை. அவரது மனைவிக்கு மேற்கு வங்காள அரசு பென்சன் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நமது தமிழ்நாட்டு மக்கள் அந்தக் கணிதப்புலியைக் கொண்டாடும் நாள் என்றோ, அந்த நாள்தான் புனித நாள்'' என்று சொன்னது இன்னமும் காதில் எதிரொலிக்கிறது. அந்தக் கணிதமேதை ராமானுஜத்தின் பிறந்த நாள் டிசம்பர் 22.தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்த படிப்பாளி - போராளி பாபாசாகேப் பீமராவ் அம்பேத்கர். தன்னைப்படிக்க வைத்த ஆசிரியரின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக்கொண்டவர். லண்டன் நூலகத்தின் அநேகமாக பெரும்பாலான நூல்களைப் படித்தவர்களின் வரிசையில் முன்னணியில் நிற்பவர் சட்டமேதை அம்பேத்கர். அவரது நினைவு நாள் டிசம்பர் 6.புரட்சிகரமான இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு, பின் அமைதி வழிக்குத் திரும்பி, ஆன்மிகத் தேடலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அரவிந்தரின் நினைவு நாள் டிசம்பர் 5.1936-ல் "சதிலீலாவதி' என்ற திரைப்படத்தை எடுத்து சாதனை புரிந்த திரைப்பட இயக்குநர் அமெரிக்கர் எல்லீஸ்.ஆர்.டங்கன். இந்தப் படத்தின் கதாநாயகன் எம்.கே. ராதா என்றபோதிலும், தமிழ்த் திரையுலகில் ஒரு சகாப்தமாகவும், தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை உருவாக்கியவருமான எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம். அவர் நடித்தது என்னவோ ஒரு இன்ஸ்பெக்டர் வேஷத்தில்தான். இவருடன் நடித்த வில்லன் நடிகர் திருநெல்வேலியிலிருந்து, நாடகக் கம்பெனியில் நடிக்க ஓடிவந்த டி.எஸ். பாலையா.இந்தப் படத்தில் இடம்பெற்ற ""கைராட்டினமே கதர் பூஷணமே'' என்ற பாடல் தமிழகம் முழுவதும் பிரபலமானது.காந்திஜியின் மதுவிலக்குக் கொள்கை இப்படத்தில் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது என்கிறார்கள். குடித்துச் சீரழியும் எம்.கே. ராதாவின் நடிப்பைப் பார்த்துவிட்டு ""இன்று முதல் நான் குடிப்பதில்லை'' என்று ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்குக் கடிதங்களாய் எழுதினார்களாம்.இப்போது சொல்லுங்கள்... எல்லீஸ்.ஆர்.டங்கனை மறக்க முடியுமா? அவரது நினைவு நாள் டிசம்பர் 1.கும்பகோணம் மகாமகத் திருவிழாவில் தனது இனிமையான குரலால் பலரை மயக்கிய இளம் பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமி நடித்த முதல் திரைப்படம் 1938-ல் வெளிவந்த "சேவாசதனம்'. படத்தை இயக்கியவர் இயக்குநர் கே. சுப்பிரமணியம்.கல்கியின் பாடலான ""காற்றினிலே வரும் கீதம்'' பாடலுக்கு மயங்காதவர்கள் யாருமுண்டோ? அந்த இசைமேதையின் நினைவு தினம் டிசம்பர் 11.முன்னரே குறிப்பிட்டதுபோல, தமிழ்த் திரையுலகில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஒரு சகாப்தமாய் விளங்கியவர் எம்.ஜி.ஆர். நல்லவனாகவே நடித்து தமிழ் மக்களின் நல்லெண்ணத்தைப்பெற்று, அரசியல் இயக்கத்தின் மூலமாக அரியணை ஏறியவர். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாடலானாலும் சரி, கவியரசு கண்ணதாசன் பாடலானாலும் சரி, கவிஞர் வாலியின் பாடலானாலும் சரி, அதை எம்.ஜி.ஆர். பாடுவதாகவே மக்கள் நம்பினார்கள். இன்னமும் அவரது ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது மறைவு தினம் டிசம்பர் 24.எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நிகழ்ந்ததுதான் நாடகக்கலைஞர் விஸ்வநாத தாஸýக்கும் நடந்தது. போலீஸôரின் கெடுபிடிகளால் நாடகங்கள் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டார். கடன்பட்டார். திருமங்கலம் அவரது சொந்த ஊர்.1940 டிசம்பர் 31-ல் சென்னையில் "வள்ளி திருமணம்' நாடகத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். அவர் காந்திஜியின் கொள்கைகளை விடுதலை வேட்கைப் பாடல்களை - நாடகத்தில் புகுத்தி விடுவார் என்பதை அறிந்து போலீஸ்காரர்கள் நாடக அரங்கை முற்றுகையிட்டனர்.மயிலாசனம் மீது அமர்ந்து ""மாயமான வாழ்வு இம்மண் மீதே'' என்ற பாடலின் வரிகளைப் பாடும்போதே திணறுகிறார். மீண்டும் தொண்டையைச் சரிசெய்துகொண்டு அதே பல்லவியைப் பாடுகிறார். மேடையின் மீதே சரிந்து விழுகிறார்.முருகன் வேடமணிந்த விஸ்வநாத தாஸின் இறுதி ஊர்வலம் அங்கிருந்தே தொடங்கியபோது ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள். மதுரகவி பாஸ்கரதாஸின் இணைபிரியா நண்பரான - அந்த நாடகக் கலைஞர் விஸ்வநாத தாஸ் இறந்த தினம் டிசம்பர் 31.

Saturday, December 3, 2011

சுகாவின் ’தாயார் சன்னதி’ - ஒரு பண்பாட்டுச் சூழலை முன் வைத்து…

“தாயார் சன்னதி” நூலை இப்பொழுது மீண்டும் நிதானமாகப் படித்த போது, புதுப்புது விஷயங்கள் மனதில் அலை மோதின. திருநெல்வேலி என்ற நிலப்பரப்பில் சுகா கண்ட கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு உண்மையை உரக்கச் சொல்வது போலத் தோன்றுகிறது.

“எய்யா, ஒன்னைய இப்பொல்லாம் ஆளையே காணுமே! அசலூர் போயிருந்தியோ!” என்று குசலம் விசாரிக்கும் கையில் காசு இல்லாத கல்யாணி ஆச்சி…

சாமியாடும்போது ஊரே தன்னை வணங்கும் அந்த சொற்ப தருணத்தில் மனம் நிறைந்த வாழ்க்கை வாழும் சிவசக்தி ரெடிமேட்ஸில் துணி கிழித்துப் போடும் அருணாசலம் பிள்ளை…

தனது சொந்த வாழ்க்கை சோகமானதாக இருந்தாலும், ஊருக்கெல்லாம் ‘துப்பு’ சொல்லி திருமணம் நடத்தி வைக்கும் வீரையன் தாத்தா…

தைப்பொங்கல் என்றாலே கரும்பு, மஞ்சள்குலை, வாழ்த்து அட்டைகள் என்ற பிம்பங்களைத் தாண்டி, சொக்கப்பனையடி முக்கில் குவிந்து கிடக்கும் ஓலைகளுக்கு மத்தியில் கைக்குழந்தைக்கு பால் கொடுத்தபடி வியாபாரம் செய்யும் நைந்து போன வாழ்க்கை வாழும் முப்பிடாதி…

அவ்வப்போது மாட்டு வண்டியில் வந்து ஓலைகளையும் பானைகளையும் கொண்டு வந்து போட்டுச் செல்லும் முப்பிடாதியின் கணவன்…

இவர்கள் எல்லோருமே ஏதோ ஒரு புள்ளியில் இணைகிறார்கள். இவர்கள் வாழ்க்கை கிழிந்து போன துணியாய்க் கிடந்தாலும், வாழ்வின் மீது தீராத நம்பிக்கை கொண்டவர்கள். எதையும் பாஸிடிவாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் பெற்றவர்கள். இவர்களைப் படிக்கும்போது மனதில் நம்பிக்கை தோன்றுகிறது. வாழ்வின் மீது ஆழமான பிடிப்பு ஏற்படுகிறது.

மரணம் என்றுமே புதிரானது. அதை வேடிக்கையாக எதிர்கொள்ளும் திருநெல்வேலிப் பெரியவர்களின் சம்பாஷணை சுவாரஸ்யமானது. கருப்பந்துறை சுடுகாட்டில் எரிந்து கொண்டிருக்கும் சுப்பிரமணிய தாத்தாவுக்குப் பிறகு யார் என்ற அவர் வயதொத்த நண்பர்கள் கிண்டலாய்ப் பேசிக் கொள்ளும் உரையாடல்கள் இயல்பான நகைச்சுவை உணர்வு கொண்டவை.

“சாப்பிட்டா எங்க வீட்டுப் பிள்ளைல எம்.ஜி.ஆர். சாப்பிடுவாருல்லா! அப்பிடி சாப்பிடணும்ல…” என்று வாழ்க்கையையே எம்.ஜி.ஆர். வழியாகப் பார்க்கும் கல்லூரிப் பேராசிரியர் அன்னபூரணன், எம்.ஜி.ஆர். படத் தொகுப்பான “காலத்தை வென்றவன்” படத்தைப் பார்த்து உடைந்து போய், மூக்கைச் சிந்தி அழுதபடி நடந்து செல்லும் அய்யாப்பிள்ளை சித்தப்பா, “அவாள மாதிரியெல்லாம் ஒரு ஆள பாக்க முடியாதுய்யா…” என்று ரொம்ப நாள் நெருங்கிப் பழகியவர் போல எம்.ஜி.ஆரைப் பற்றிச் சொல்லும் வாட்ச்மேன் நெல்லையப்பன்…

தமிழ்த்திரையுலகில் கால் நூற்றாண்டுகளுக்குச் சற்றே கூடுதலாக ஆக்கிரமித்திருந்த எம்.ஜி.ஆர். என்ற சகாப்தம், தமிழ்ச் சமூகத்தில் மேலிருந்து கீழ்வரை பாதித்திருந்ததன் அடையாளங்களாய் இவர்களை உணர முடியும்.

துஷ்டி வீட்டில், சாம்பல் கரைத்த அன்று, பந்தி பரிமாறும்போது, “சுப்பிரமணிப்பய சரியா சாப்புடுதானா?மூதி அவந்தான் கெடந்து அத்த அத்தன்னு கூப்பாடு போட்டு அளுதுக்கிட்டிருந்தான்…” என்று பரிமாறுபவர் கேட்க, சுப்பிரமணி ரசத்தைக் கையில் வாங்கி உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருப்பார். எவ்வளவு ரசமான விஷயம். இரண்டுமே நிஜங்கள் அல்லவா?

‘கிரேக்க’ இனத்தவர் தமிழகத்தில் ஊடுருவியிருந்ததைக் கண்டுபிடித்துக் கூறிய மீனாட்சி சுந்தரத்தை பாராட்டியே ஆக வேண்டும். ஜெயமோகனின் நண்பர் சண்முகசுந்தரமும் ‘கிரேக்கர்’ என்று அறியும்போது படிக்கும் வாசகனிடம் வெடிச்சிரிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது.

சிவதீட்சை பெற்றிருந்த சுந்தரம் பிள்ளை பெரியப்பாவுடன் சேர்ந்து பொருட்காட்சிக்குச் சென்று ‘ராட்டு’ சுற்றிய அனுபவம் இருக்கிறதே…அந்த ஹாஸ்யத்தை எழுத்தில் சொல்லி மாளாது.

‘ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா’ பாடலை ரசித்துக் கேட்கும் ராஜேஸ்வரி அக்கா இப்போது சென்னை என்ற கடலில் கரைந்து போய் விட்டாள். ‘தாயார் சன்னதி’ நூலை அவர் இப்போது படித்தாலும், பாடலைக் கேட்ட அதே சந்தோஷத்தை உணர்வார்கள் என்று தோன்றுகிறது.

அதேபோல, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடலைப் பாடும் பெண் சாயல் கொண்ட குகன், ‘நாடகமெல்லாம் கண்டேன்’ என்ற பாடலைப் பாட முயற்சித்த (அதுதானே சரி?) முகம் தெரியாத அந்த சொக்கலிங்க மாமா ஆகியோரும்கூட கனவில் வந்து போவார்கள்.

உச்சினிமாகாளி கொடையின்போது அருள் வந்து சாமியாடிய பிரமு ஆச்சி, மறுநாள் காலை தொலைந்து போன ஒற்றைத் தோட்டை அழுது கொண்டே தரையில் தேடியது எவ்வளவு யதார்த்தமானது!

தாத்தாக்களின் பெயர் விடப்பட்ட பேரன்களின் மேல் இந்த ஆச்சிகளுக்கு இருக்கும் பிரியம் சொல்லி மாளாது. தனது மகனை அம்மைக்காரி “ஏல, இங்க வா.” என்று கூப்பிட்டதுக்கு, இந்த ஆச்சிகள் ஊர்ப்பிரச்னையாக்கி விடுகிறார்கள்.

ஆழ்வார் குறிச்சியில் இருக்கும் ஆச்சிகள்தாம் எத்தனை பேர்! சைலு தாத்தா வீட்டாச்சியின் கிண்டலான பேச்சை யார்தாம் ரசிக்காமல் இருக்க முடியும்? (”கூட ரெண்டு நாளைக்கு ஆளாருச்சிலேருந்தா திருனோலிக்காரங்க கொறஞ்சா போயிருவியெ?”…) எனக்கும் சொந்த ஊர் ஆழ்வார்குறிச்சிதாம். தங்கத்தாச்சியை நினைத்துக் கொள்கிறேன்.

சுகாவின் சங்கீத ஞானம், அது குறித்து எனக்கு எதுவும் தெரியாவிட்டாலும்கூட, பிரமிக்க வைக்கிரது. பொறாமைப்படவும் வைக்கிறது.

மொத்தத்தில் “தாயார் சன்னதி” படிக்கும்போது, பல இடங்களில் ஹாஸ்யம் வெடிக்கிறது. கண்கள் பனிக்கின்றன. மூட நம்பிக்கைகளைப் போகிற போக்கில் கிண்டல் செய்கிறார். சினிமா என்ற கலவை சராசரி மனிதனின் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளதைக் காட்டுகிறார். திருநெல்வேலிப் பண்பாட்டினை நயம்பட கூறுகிறார். பால்ய கால காதல்களை ரசனையோடு சொல்கிறார்.

suka

சுகா

சுகா… உங்களிடம் ஒரு கேள்வி.

திருநெல்வேலியில் உள்ள இந்த பண்பாட்டுச் சூழல், அது உருவாக்கியுள்ள இந்த சாகாவரம் பெற்ற மனிதர்கள், அவர்தம் நகைச்சுவை உரையாடல்கள்… வேறு ஒரு மாறுபட்ட கலாச்சாரத்தில் அல்லது மண்ணில் இவையெல்லாம் சாத்தியமா?

இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.

புத்தகத்தை மூடிவிட்டு, கண்கள் மூடிய நிலையில், கடைசியில் யார் நினைவில் தங்கியிருக்கிறார் என்று யோசிக்கும்போது…

திருநெல்வேலி சைவாள் ஹோட்டல் உரிமையாளர் கருப்பையா பிள்ளையின் மனைவி…

வாழ்நாள் முழுவதும் புகை படிந்த அடுக்களை இருட்டுக்குள் காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல் முன்பாக இடுங்கிய கண்களுடன் நின்று கொண்டிருக்கும் அந்தப் பெயர் குறிப்பிடாத பெண்மணியின் ஒற்றைக்குரல் (”கல்லு காயுது… செத்த நேரம் ஆகும்…”) மனதைப் பிசைகிறது.

உங்கள் கைகளைத் தேடுகிறேன் சுகா…!

சுகாவின் ‘தாயார் சன்னதி’ இரண்டாம் பதிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது. தமிழகமெங்கும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Wednesday, September 7, 2011

அவனும் அவளும்

அவனும் அவளும் (சிறுகதை)

வாசல் கதவைத் திறந்து வீட்டிற்குள் நுழையும் போது மணி 8.30ஐ த் தாண்டியிருந்தது. காம்பவுண்டுச் சுவருக்கும் வீட்டிற்குமான திறந்தவெளி முழுவதும் வேப்பிலைகள் சருகுகளாய் சிதறிக்கிடந்தன. காலையில் என்னதான் பெருக்கித் தள்ளினாலும், மாலையில் வீடு திரும்பும்போது பழுத்த இலைகள் உதிர்ந்து பெருகிக் கிடந்தன. துளிர்த்தலும் உலர்தலுமாய்....... அஞ்சல் பெட்டியைத் திறந்து, உள்ளிருந்த நாலைந்து தபால்களைக் கையில் எடுத்துக் கொண்டு, பூட்டினைத் திறந்தாள் அவள். ஹாலில் இருந்த டீப்பாயில் பையை வீசி விட்டு சோபாவில் சரிந்தாள். அவன் வர இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். சமயங்களில் இரவு 11 மணிக்குக் கூட வந்து "பெல்"லை அழுத்துவான். அப்போதெல்லாம் அரைத்தூக்கத்தில் வந்துதான் கதவைத் திறப்பாள். கை, கால்கள் ரொம்பவும் தளர்ந்து போயிருந்தன. நெற்றிப்பொட்டு விண் விண் னென்று தெறித்தது. யாராவது கொஞ்சம் டீ போட்டுக் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

அரசு நன்றாக டீப் போடுவான். சனி, ஞாயிறு மாலைப் பொழுதுகளில் அவன் வீட்டிலிருந்தால் அருமையான தேநீர் போட்டு, கோப்பைகளில் ஊற்றிக் கொண்டு வருவான். அந்த தேநீரின் மணமும், சுவையும் அவளுக்குக்கூட வராது. அதில் அவனுக்குப் பெருமை கூட உண்டு. "எப்படி உன்னாலே மட்டும் இப்படிப் போட முடியுது?" அவள் வேண்டுமென்றே கேட்பாள். அது அவனைச் சந்தோசப்படுத்தும். அதற்காகத்தானே கேட்டதே? அவன் மென்மையாகச் சிரிப்பான். எல்லாத்துக்கும் இந்தச் சிரிப்புத்தான்.... அந்தச் சிரிப்பில் தான் தான் ஒவ்வொன்றாய் இழந்து கொண்டிருக்கின்றோமோ என்று கூடத் தோன்றும் அவளுக்கு.

பக்கத்து வீட்டில் தொலைக்காட்சி தொடரின் அழுகைச் சத்தம் இவள் காதுகளில் எதிரொலித்துத் திரும்பியது. "ஏன் இவ்வளவு சத்தமாய் அழுகையைக் கேட்டு ரசிக்கிறார்கள்?" என்று எரிச்சலாய் வந்தது. எழுந்து அடுக்களைக்குச் சென்று அவசர அவசரமாய் டீப் போடத் தொடங்கினாள். தலைக்கு மேலே உயரத்தில் இருந்த கண்ணாடிக் கதவுகளைத் திறந்து தேநீர்க் கோப்பைகளை எடுத்து வைத்தாள். அரசு போன மாதம் டில்லி போயிருந்த போது வாங்கி வந்த பீங்கான் கோப்பைகள். பிங்க் கலர் பூப் போட்டவை. அவனுக்குப் பிடித்தது இந்த பிங்க் நிறம். சேலை கட்டினாலும், பிங்க் நிறத்தில் கட்டியிருந்தால் அவன் சந்தோசத்தில் கைகோர்த்து நடப்பான். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் ஒரு லட்ச ரூபாய் செலவில் இந்த மாடுலர் கிச்சன் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. விதவிதமான மரவேலைப்பாடுகளுடன்..... பாத்திரங்கள் வைக்க வசதியான கப்போர்டுகள்..... மென்மையான வெளிர் நிற பிங்க் நிற வர்ணம் பூசப்பட்ட மரக்கதவுகள். ஒரு லட்சத்திற்கும் மேலேயே தான் ஆகியிருக்கும்...

ஏழாம் வகுப்பு படிக்கும்போது அப்பா கட்டியிருந்த வீடே ஒரு லட்சத்திற்கும் குறைவு தான்.. வாசலில் ஒரு சின்ன வராண்டா. அப்பா சைக்கிள் நிறுத்த வசதியாக இருந்தது. அதன்பின் சின்னதாக ஒரு ஹால். பக்கவாட்டில் ஒரு பெட் ரூம். ஹாலை அடுத்து அடுக்களை. அடுக்களையில் பாத்திரங்கள் வைக்க போதிய ஸ்லாப் இல்லை என்பது அம்மாவின் நீண்டநாள் வருத்தமாயிருந்தது. கடைசி நேரம் கைக்கடிப்பில் அதில் வந்து இடி விழுந்தது. சுவர்களுக்கு வெள்ளை மட்டும் தான் அடிக்க முடிந்தது. விதவிதமான டிஸ்டம்பர் வர்ணங்கள் அடிக்க முடியாமலே போயிற்று. "ஆறு மாசம் கழிச்சி அடிச்சாத்தான் கலர் நல்லாப் பிடிச்சு நிக்கும்" யாரோ சொன்னதை அப்பா ஆறு வருசமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்க பாவமாக இருந்தது. மூன்று பிள்ளைகளைப் படிக்க வைத்துக் கொண்டு அவர் இப்போது வீட்டைக் கட்டியிருக்க வேண்டாமோ என்று கூட அம்மா நினைத்ததுண்டு.

"பாரு..... வேகு வேகுன்னு சைக்கிள்ல போறத.... சின்னதா ஒரு செகண்ட் ஹேண்ட் டிவிஎஸ் 50 வண்டிய வாங்கலாம்ல....." அம்மா அவரை நினைத்துப் புலம்புவாள்.

"இப்பதான் வீடு கட்டியிருக்கு. அடுத்த லோன் உடனே வாங்க முடியாது.... வண்டி வாங்கினா பெட்ரோல் போடணும்... சைக்கிள மாதிரி காத்தடிச்சிட்டு ஓட்ட முடியும்னு நெனைக்கியா?" அப்பா சிரித்தபடி கூறுவார்.

தேநீர்க்கோப்பையை கையில் ஏந்தியபடி ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தாள். டீப்பாயில் கிடந்த "ரிமோட்"டை எடுத்து பொத்தானை அமுக்கினாள்.
சுவரில் பெரிதாய் மாட்டியிருந்த பிளாஸ்மா டிவி உயிர் பெற்றது. சுட்டி டிவியி்ல் மிக்கி மவுஸ் விளையாடிக் கொண்டிருந்தது. அரசு நேரம் கிடைக்கும்போது சுட்டி டிவி பார்ப்பான். காலையில் அவன் பார்த்த சேனல்... அவளுக்கு காமெடிக் காட்சிகள் பிடிக்கும். திருநங்கைகளைக் கேலி செய்யும் ஒரு பழைய நகைச்சுவை ஓடிக் கொண்டிருந்தது. அவளுக்கு இதை ரசிக்க முடியவில்லை. சேனலை மாற்றினாள். ஒரு மலையாளச் சேனலில் மோகன்லாலும், தபுவும் நடித்த பாடல் காட்சி...... ரம்மியமான சுழலில் இருவரும் கை கோர்த்து நடந்து கொண்டிருந்தனர். மெலிதான தூரல் விழுந்து கொண்டிருந்தது. போன மாசம் அம்மா இங்கு வந்திருந்தபோது, ஹாலில் மாட்டியிருந்த இந்த டிவியைப் பார்த்து அசந்தே போனாள்.
"மதி இதென்னடி இப்படி சினிமா தியேட்டர் மாதிரி கேக்குது... டங்டங்னு... எவ்வளவு பெரிசா தெரியுது..... சினிமா பார்க்க தியேட்டருக்கே போக வேண்டாம் போல.... எவ்வளவு டீ ஆச்சி?"
அம்மாவிற்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அம்மாவும் அவளும் எல்லா சினிமாவும் பார்த்து விடுவார்கள். அவளை விடவும் அம்மாவிற்குத்தான் சினிமா ஆசை அதிகம். அம்மாவின் ஒரே பொழுதுபோக்கு இதுதான். ராயல் தியேட்டர், ரத்னா தியேட்டர், பாப்புலர் தியேட்டர்..... என மாறி, மாறி ஏதாவது ஒரு படம்.... சமயங்களில் பார்த்த படத்தையே பார்க்க வேண்டி கூட வரும். எல்லா வீடுகளிலும் டிவி பெட்டிகள், மாடியில் ஆன்டெனாக்கள் முளைக்கும் போது அம்மா தான் முதலில் நச்சரித்தாள். "ஏதாவது ஒரு பிளாக் அன்ட் ஒய்ட் டிவியாச்சும் வாங்கி மாட்டுங்களேன்..."

தெரு முழுக்க எல்லோரும் டிவி வாங்கிய பின்னணியில், ஒரு மாலை நேரத்தில் அப்பா சைக்கிளில் ஒரு டிவி பெட்டியை வைத்து உருட்டியபடி வந்து கொண்டிருந்தார். தம்பி வேணு பெட்டியை இறுகப்பிடித்தபடி அப்பாவிற்கு ஒத்தாசையாக வந்து கொண்டிருந்தான்.

புதுசாய் வாங்கிய டயனோரா கலர் டிவியைப் பார்த்து அம்மாவுக்கும் அவளுக்கும் தலைகால் புரியவில்லை.
"ஒரு ஆட்டோ பிடிச்சுக் கொண்டு வர வேண்டிய தான..... சைக்கிள்ல உருட்டிட்டு வாறீக.... எசகு பிசகா சரிஞ்சி போச்சுன்னா..." அம்மா ஆச்சரியத்தில் கூவினாள். அன்று வீடே என்னமாய் கொண்டாட்டமாய் இருந்தது. அக்கா சக்தி, தம்பி வேணு, இவள் எல்லோருமே உற்சாகக்களிப்பில் இருந்தார்கள்..... அன்று இரவு முன் வராண்டா லைட் ரொம்ப நேரமாக எரிந்தது. அப்பா கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தார்.

வழக்கம் போல அவள் ஒருநாள் உள்ளே நுழையும் போது தான் பார்த்தாள். ஹாலில் மாட்டியிருந்த பிளாஸ்மா டிவியை. இது எப்ப மாட்டியது?

செல்பேசியில் அவனை அழைத்தாள்.
"சும்மா தான்.... உனக்கு ஒரு சர்ப்ரைஸாக இருக்கட்டுமேன்னு நான் தான் இன்னிக்கு மதியம் வந்து மாட்டறதுக்கு ஏற்பாடு செஞ்சேன்....." அரசு சிரிப்பது தெரிந்தது. அவளுக்கும் சந்தோசமாகத்தான் இருந்தது. திருமணமான ஒரு வருடத்தில் எது பாக்கி இருக்கிறது..... எல்லாமே கச்சிதமாக அதனதன் இடத்தில் பொருத்தமாய் அமைந்திருக்கிறது. திருமணத்திற்கு முன்பே இந்த வீட்டை அரசு வாங்கியிருந்தான். கடனில் முக்காவாசிக்கு மேலேயே கட்டியிருந்தான். காம்பவுண்டுச் சுவரையொட்டி விதவிதமான பூச்செடிகளும் குரோட்டன்ஸ்களும் சிரித்துக் கொண்டிருந்தன. அவன் வைத்திருக்கும் ஹீரோ ஹோண்டா பைக் கூட புதுமாடல் தான் முன்னமேயே வாங்கியிருந்தான். குளிர் சாதனப்பெட்டி, பெட்ரூமில் கிடந்த புதிய படுக்கை, கட்டில், இன்டக்சன் ஸ்டவ், வாஷிங் மெஷின்..... என எல்லாமுமே முதல் இரண்டு மாதங்களில் இருவருமே சேர்ந்து வாங்கியிருந்தார்கள். ஆயிரத்து ஐநூறு சதுர அடியில் நவீனமாகக் கட்டப்பட்டிருந்த வீட்டின் சகல அறைகளிலும் எல்லாமுமே தேவைக்கு மேலேயே அலங்கரிக்கப் பட்டிருந்தன.

அவன் சிரத்தையோடு சில காரியங்களைச் செய்யும்போது, அவளும் உடன்சேர்ந்து உதவி செய்வாள். சுவரில் ஆணி அடித்து, ரவி வர்மாவின் அந்த ஓவியத்தை மாட்டும்போது தூரத்தில் நின்று ரசிப்பாள்.
"எல்லாம் சரியாயிருக்கா?"

அவன் புருவத்தை உயர்த்திக் கேட்பான். அவள் ஆமோதித்துக் கையசைப்பாள். அவன் மென்மையாய் சிரிப்பான்... அதே சிரிப்பு!

"குட்டிப்பாப்பா மட்டும் வேண்டாம்னு ஏன் சொல்ற அரசு?" அவள் கண்களில் நீர் கோர்க்க கேட்பாள் அழுகையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வாள்.

"ஏய் கழுதை! யாராவது பாப்பா வேணாம்னு சொல்லுவாங்களா..... கொஞ்சம்... கொஞ்சம் காலம் பொறு.... மூணு பிள்ளைங்க வேணும்னாலும் பெத்துக்கலாம்.... ஓகேயா?" அவன் சிரித்தான். அவளை மென்மையாய் அணைத்தான். அவள் திமிறினாள்.

"போதும்..... விடு இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் பொறுக்கறது? என்னால ஒத்தையில் இருக்கமுடியல..." அவள் கொஞ்சம் கோபமாகவே கேட்டாள்.

"என்ன மதி இப்படிக் கோபப்படறீயே டா! இன்னும் ஒரு வருஷம் பொறுக்க மாட்டியா.... இப்ப நீ கன்சீவ் ஆனேன்னா.... ஆறு மாசத்துலே வேலைய விட வேண்டி வரும்.... அப்புறம் வேற கம்பெனிக்கு போகணும்னாலும் முடியாதுப்பா.... ஒரு வருஷம் நீ சும்மா தான் வீட்டுல இருக்கணும்.... அது இத விடப் போரா இருக்கும்பா... புரிஞ்சுக்கவே மாட்டிங்கியே...."

அவனும் சமயங்களில் இப்படிக் கோபப்படுவதுண்டு. இந்த வீட்டில் எல்லாம் இருப்பதாக அவன் நினைத்துக் கொள்வதை அவள் வெறுத்தாள். வீட்டில் எல்லாப் பொருட்களும் அதனதன் இடத்தில் ஒழுங்கு மாறாமல் இருக்கின்றன. தரை கூட அழுக்காவதில்லை. எல்லா ஒழுங்கையும் சீர்குலைக்க ஒரு மழலைச் சத்தம் வேண்டும். தரையில் இரைந்து கிடக்கும் பொம்மைகள் வேண்டும். பின்வாசல் கொடியில் குழந்தைகளின் ஈர ஜட்டிகள் காய வேண்டும். ஈரம் சொட்டச்சொட்ட காட்டன் சட்டைகள் தொங்க வேண்டும்.

டீப்பாயில் கிடந்த அம்மாவின் கடிதத்தைப் பார்த்தாள். என்ன எழுதியிருப்பாள் என்று தெரியும். கவரை உடைக்க மனசு வரவில்லை. விலாவரியாய் எல்லாம் எழுதிவிட்டு " ஏதும் விசேசம் உண்டா?" என்று கேட்டு முடித்திருப்பாள்.
அரசு இன்றைக்கு சரியாக 9.30 மணிக்கு வந்து விட்டான் "தலை வலிக்குதா மதி?" அவன் அவள் அருகே அமர்ந்து அவள் தலையைக் கோதி விட்டான். பேண்ட், சமர்ட்டைக் கூட மாற்றாமல் உட்கார்ந்திருந்தான்.

"நான் ஒண்ணு கேப்பேன்... மாட்டேன்னு சொல்ல மாட்டீங்களே?" அவள், அவன் மடியில் தலை சாய்த்து கேட்டாள்.

"ம்.... சொல்லு..." அவன் கைகள் இன்னமும் தலையைக் கோதியபடியே இருந்தது.

"நான் ஒரு வாரம் எங்கம்மா வீட்டுக்குப் போய்ட்டு வரட்டுமா?"

அவள் கண்கள் பளபளக்க கேட்டாள். அவன் அவளை முதன்முறையாக வித்தியாசமாகப் பார்த்தான். பின் சிரித்தபடி தலையாட்டினான். ஆனால் அது வழக்கமான சிரிப்பு போல இல்லை.

Reply
Reply to all
Forward



Monday, August 29, 2011

லோக் பால் வந்தாச்சு...

அண்ணா ஹசாரே போராட்டம் வெற்றி
நாடெங்கும் மக்கள் கொண்டாட்டம்..(இந்த மக்களில் அம்பானி சகோதரர்களும் அடக்கம்.)
ஹையா...லோக் பால் வந்தாச்சு...
நாளை முதல் தாலுகா ஆபீஸ்ல , பத்திர பதிவு ஆபீஸ்ல , வட்டார போக்குவரத்து அலுவலகத்துல யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்...ஹையா ...

வந்தே மாதரம் ..ஜெய் ஹிந்த் !